கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத தமிழ்க் குடும்பங்களே இல்லை எனலாம்.
கோப தாபங்களில் உன்னை என் சாமி கேட்பார் என்கிற வார்த்தை வீச்சுகளுக்கெல்லாம் இங்கே குறைவே இல்லை. கோபத்தில் வார்த்தை விடுகிறவர் தன் நிலையே சரி, தவறு பிறத்தியாரிடம் மாத்திரம் தான் என்கிற மனோபாவத்தில் இருப்பார்கள். இன்னும் சிலர் வஞ்சப் புகழ்ச்சியாக ஏதோ தவறு நம் மீது தான் என்ற கற்பிதத்தில் நம்மை, "நீ நல்லா இரு சாமி" என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுவார்கள்.
என் சாமி உன்னைக் கேட்கும் என்ற வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நான் நினைத்துக் கொள்வதுண்டு, என்னமோ நம்மை வைதவர் மட்டும் தான் இறைவனைத் தொழுகிறார், நாமெல்லாம் தொழுவதில்லையா. நாம் கும்பிடும் சாமி நமக்கும் அரணாக நிச்சயம் இருப்பார். கவலையே வேண்டாம்.
ஶ்ரீமத் பகவத் கீதை பாஷ்ய முகவுரையில் ஸ்வாமி சித்பவானந்தர்:
"கடவுள் நமக்குத் துணையாய் இருக்கும் போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்ய வல்லது?
கடவுள் துணை நமக்கு இல்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்து விடும்?".
கடவுள் துணை இருக்கும் போது எந்த பில்லி, சூனியமும் அண்டாது.
அப்படியென்றால் கடவுள் பாரபட்சம் பார்ப்பவரா, நல்லவர், நல்லவர் அல்லாதவர் என்று. அவர் பார்ப்பதில்லை தான். குருக்ஷேத்ர யுத்தம் துவங்கும் முன் கிருஷ்ணபரமாத்மா சமாதான முயற்சியை மேற்கொள்ளத் தவறவில்லை. வாய்ப்பை அளித்து அதைப் பயன்படுத்திக் கொள்கிற, பயன்படுத்தத் தவறுகிற கர்மக் கணக்குகளை மனிதனிடம் விட்டு விடுகிறார் இறைவன்.

